“ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது”- கருத்து கேட்பு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பு!

தூத்துக்குடியில் இன்று காலை நடந்த கருத்துக்கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமா? என ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டார். அப்பொழுது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். காலை 11 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில், கருத்துக்கூட்டம் குறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.