இயக்குநர் பாரதிராஜாவின் ஆவேச அறிக்கை.!

தனது பெயரை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலையே முடங்கிக் கிடக்கின்றனர். அந்த வகையில் ஊரடங்கை பயனுள்ள வகையில் மாற்ற திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திலுள்ள பிரச்சினைகளையும், திரையுலகில் மற்ற பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினைகளையும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்து இருந்தது. அதில் ஆர். கே. செல்வமணி, இமயம் பாரதிராஜா உட்பட 42 உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது தனது பெயரை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல.

தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்து கொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை. பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த அறிக்கையால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.