சபரிமலையில் முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு முடிவு..!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவமபர் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17 கார்த்திகை 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அன்றிலிருந்து சரியாக 41 நாள் கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 11 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது டிசம்பர் 30 திறக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு சுமுகமான மற்றும் பாதுகாப்பான தரிசன வசதியை ஏற்படுத்த வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை நிறுத்தப்படுகிறது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதி முன்பதிவு வரம்பு 50,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் மகரவிளக்கு தினமான ஜனவரி 15-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திற்கு 40,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் 14-ம் மற்றும் 15-ம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நாட்களில் குழந்தைகள் சபரிமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியுள்ளார். வழக்கமாக மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் வரும் ஐயப்ப பக்தர்கள், மகரவிளக்கு மற்றும் திருவாபரனை தரிசனம் செய்ய சன்னிதானம் செல்லாமல் சபரிமலையில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு வருகின்றனர்.

மீண்டும் ஐயப்ப தரிசனத்திற்காக அதிக பக்தர்கள் மலை ஏறினால், பாதுகாப்பு மற்றும் சுமூக தரிசன வசதி பாதிக்கும். இதனால், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம் அளிக்கும் வகையில் ஸ்பாட் புக்கிங்கை தவிர்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார். 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan