Dengue : பெற்றோர்கள் கவனத்திற்கு..! டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி…?

மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவ தொடங்கி விடும். தற்போது அதிகமாக டெங்கு காய்ச்சல் தான் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறது. ஏடீஸ் கொசுக்கள்  கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடுகின்றன, அவை பொதுவாக கிணறுகள், குளங்கள் மற்றும் மழை நீர் தொட்டிகள் போன்ற இடங்களில் தான் முட்டையிடுகின்றன. ஏடீஸ் கொசுக்கள் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் நோய்களை பரப்பும் தன்மை கொண்டது.

டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு,  காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி மற்றும் தோல் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படும். தற்போது இந்த பதிவில் டெங்கு மற்றும் மற்ற வைரஸ் காய்ச்சல்களில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி பார்ப்போம்.

பெற்றோர்கள் கவனத்திற்கு 

கொசுக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் காணப்படும் டயர், சிரட்டை போன்ற உபயோகமற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை அகற்றி விட வேண்டும். ஏனென்றால் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.

வீட்டை சுற்றிலும் கொசுக்களை ஒழிக்கக்கூடிய திரவங்களை தெளிக்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கிணறுகளை மூடி வைக்க வேண்டும். அவற்றில் கொசு உற்பத்தியை தடுக்கும் வண்ணம் மருந்துகளை ஊற்றி வைத்திருப்பது.

குழந்தைகள் பாதுகாப்பு 

குழந்தைகளை கொசுக்கடியால் இருந்து பாதுகாக்க கூடிய லோஷன்களை பயன்படுத்த வேண்டும். கால் மற்றும் கைகளை முழுவதுமாக மறைக்க கூடிய வகையில் குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அதேபோல், குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு மற்றும் தண்ணீரில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடையில் வாங்க கூடிய உணவுகளை தவிர்த்து, வீட்டிலேயே உணவு தயாரித்து கொடுக்கலாம். தண்ணீரை எப்போதும் கொத்திக்க வைத்து ஆற வைத்து கொடுக்க வேண்டும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை கொடுக்க வேண்டும்.

இரவில் தூங்க செல்லும் போது, கொசுவலைகளை படுக்கையை சுற்றிலும் விரித்து விட வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் குழந்தைகளை பாதிக்காத வண்ணம் குழந்தைகளை பார்த்துக்கொள்வது நல்லது. அதே சமயம் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.