நாளையுடன் காலக்கெடு முடிவு.. டிக்டாக் மனு தாக்கல்..!

சீன நிறுவனமான பைட்டான்ஸின் டிக் டாக் செயலியை தடை செய்ய அமெரிக்காவில் நீண்டகால இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் டிக் டாக் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தி காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.

டிக் டாக் செயலியை தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், நவம்பர் 12-ம் தேதி முதல் டிக் டாக் தடை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, டிக் டாக் பயனாளர்கள் 3 பேர் பென்சில்வேனியா மாகாணம் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், நீதிபதிகள் டிக் டாக் தடை செய்வதற்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில், டிக் டாக் தனது அமெரிக்க சொத்துக்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் காலாவதியாக உள்ளதால் டிக்டாக் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், அமெரிக்காவில் அந்நிய முதலீடு தொடர்பான டிரம்ப் நிர்வாகக் குழுவின் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 800 மில்லியன் பயனாளர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 100 மில்லியன் பயனாளர்கள் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகின்றன. இவர்களில் 50 மில்லியன் நபர்கள் தினமும் டிக் டாக் செயலி பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan