கோவாக்சின் உற்பத்தி தொடக்கத்திலிருந்து பயனரை அடைய 4 மாதங்கள் ஆகும்: பாரத் பயோடெக்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வருவதால் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரமாக்கியுள்ளது. இந்தியர்களுக்கு இந்த வருடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பாரத் பையோடெக் நிறுவனம் ஒரு தொகுப்பு தடுப்பூசி தாயாரிக்க 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா அலை வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசியை போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல மாநிலங்கள் தன்னிச்சையாக தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி இறக்குமதி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

2021-க்குள் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு ஆர்டருக்கான விநியோகம் தொடங்க 4 மாதங்கள் ஆகும் என்றும், கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு கொடுத்த ஆர்டரை ஜூன் மாதம் தான்  விநியோகம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.ஒரு தொகுப்பிற்கான தடுப்பூசியை தயாரித்து அதை விநியோகிக்க குறைந்தது 120 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது பாரத் பையோடெக் நிறுவனம்.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை போடுவதற்கு அனுமதி இருந்தாலும் பெரும்பாலும் கோவாக்ஸின் தடுப்பூசியே போடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் பாரத் பையோடெக் நிறுவனம் அறிவித்த இத்தகவலால் மத்திய அரசு கூறிய படி இந்த வருடத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுமா  ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.