கொரோனோ நிவாரணமாக குடும்ப அட்டைகளுக்கு 15,000 வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுத்தாக்கள் அவசரவழக்காக ஏற்க மறுப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000  நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  ரமேஷ் உமாபதி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மக்கள் தாங்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக கூலிதொழிலாளர்கள் இந்த தடைய்யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், வாழ்வாதாரத்திற்காகவும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்  மாதம் 15 ஆயிரம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள கிருமி நாசினி மற்றும் சோப்புக்கட்டிகளை நேரடியாக வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத  நிலையில், நீதிபதிகள் திரு. ஆர்.சுப்பையா, திரு.  பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள்  ஆஜராகி, இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் திரு. அர்விந்த் பாண்டியன் அவர்கள் ஆஜராகி, கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதைனையடுத்து, இந்த  மனுவை அவசர வழக்காக விசாரிக்க  மறுத்த நீதிபதிகள், வழக்கமான நடைமுறைப்படி பட்டியலிடப்பட்டால் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

author avatar
Kaliraj