தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா.. ஒரே நாளில் 64 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,650 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 34 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சென்னையில் இறப்பு விகிதம் 1.57 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று, 50 வயதிற்கு கீழ் உள்ள 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 30 வயதிற்குப்பட்ட இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.