கர்நாடக தேர்தலில் முன்னிலை பெற்று வரும் நிலையில், கட்சித் தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
ஆட்சி அமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில் 115க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இதில், பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 8 பேர் பின்னடைவை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் முன்னிலை பெற்று வருகின்றனர். ஆளும் கட்சியான பாஜக 83 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூரு நகருக்கு வந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.