மணல் லாரி மோதி ஒன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்…!

தஞ்சையில், மணல் லாரி மோதி ஒன்றாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. 

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார்.

வீட்டின் அருகே வேனிலிருந்து இறங்கிய இவர், எதிரே உள்ள வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக மணல் லாரி கவிபாலன் மீது மோதியது. இதனால், இவர் முன்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததால், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.