வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா-25 பேர் உயிரிழப்பு..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள் கிழமை அன்று அதீத கனமழை பெய்துள்ளது. இதனால் இம்மாகாணத்தின் தலைநகரான ஜெங்கோ வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வானிலை மைய அறிவிப்பின்படி, கடந்த மூன்று தினங்களில் இங்கு 640 மி.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நகரின் போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளப்பாதிப்பில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காணாமல் போய் உள்ளனர். அதனால் இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.