சாலைகள் மிக முக்கியம்.. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை பணிகள் மற்றும் பாலம் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தலைமை செயலகத்தில் இந்த கூட்டமானது நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து ஆய்வுகூட்ட்டம் இன்று நடைபெற்றது. தற்போது பொருளாதார வளர்ச்சி அடைந்ததரும் காரணத்தால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் உயர்வு பன்மடங்கு ஆகிவிட்டது. இந்த சமயத்தில் சாலையின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு நியாயமானது. என முதல்வர் குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளில் பணிகள் நடைபெற்று வரும் போது, சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் குறித்து தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என சாலை கட்டுமான பணிகள் குறித்து முதல்வர் குறிப்பிட்டார்.

இந்தத் துறையில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலஎடுப்பு பிரச்சனை. இந்த பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். தரமான சாலைகள் மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்கும். சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகளை தவிர்த்து இதர காரணங்களுக்கான சாலைகள் தோண்டப்படுவதை காண முடிகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

எனவே தோண்டப்பட்டுள்ள சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும். இது பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மட்டுமல்ல. அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திட்ட பணிகளுக்கென சிறப்பு முக்கியத்துவம் அளித்து அதனை விரைந்து முடிக்க வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தலைமைச் செயலகத்தை நீங்கள் முறையிடலாம் என்று அலுவலக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.