சென்னை மிதித்தவனை கைவிடாது, இதிலிருந்து மீண்டு வாழும்- விவேக்.!

கொரோனாவிலிருந்து சென்னை மீண்டு வாழும் என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை ; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. இது மீளும் ;வாழும் என்று கூறியுள்ளார்.