Rain Alert: புயல் எதிரொலி…7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் புயல் உருவாகி உள்ளதால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல்

நேற்று காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை முதல் அதே இடத்தில் நிலவுகிறது.

இது பரதீப் (ஒடிசா)- ற்கு தெற்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்) – விற்கு தெற்கே – தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.

அரபிக்கடல்

நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர ‘தேஜ்’ புயல் இன்று  காலை வலு குறைந்து மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (24-10-2023) அன்று மிகத்தீவிர புயலாக ஏமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.