விசாவை ரத்து செய்த மத்திய அரசு.! ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்று சந்தேகம்.?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்று பல நாடுகளில் விளையாட்டு போட்டிகளை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், வரும் ஏப்ரல் 15ம் தேதி வர வெளிநாட்டு பயணிகளுக்கு விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் வரும் 29ம் தேதி முதல் 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதால், போட்டியை காண அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என்று போட்டியை ஒத்திவைக்க கோரி சிலர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த சூழலில் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை விசாவை ரத்து செய்துள்ளதால், ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், பொதுவாக ஐபிஎல் டி20 போட்டியில் விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில்தான் வருவார்கள். மத்திய அரசு விசாவை ரத்து செய்துள்ளதால், ஏப்ரல் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அதன்பின் பி2 விளையாட்டு விசாவில் வர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 14ம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்