சுஷாந்த் மரண வழக்கு: சுஷாந்த் சிங் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழு ஆய்வு!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் உயிரிழந்த வழக்கில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த்தின் தந்தை புகாரளித்தார்.

இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், மும்பை போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், சுஷாந்த்தின் தந்தை, சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார்.

இதன்காரணமாக, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசு சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. சுஷாந்தின் மரண வழக்கு தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி மற்றும் பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார், மும்பையில் உள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.