#BREAKING: தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில், தூத்துக்குடியில் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகரம் கிராமத்தில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். அந்த வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையானது இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணி ஆற்று மணலில் அணுசக்தி கனிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை கூறி, மத்திய அணுசக்தி செயலர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணலை எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்த மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை டிசம்பர் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்