#BREAKING: காவலர் தேர்வு நியமனத்திற்கு இடைக்காலத் தடை -உயர்நீதிமன்றம் அதிரடி

காவலர் தேர்வு நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ  தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு 8,888 பணியிடங்களுக்கு  அறிவிப்பாணையை வெளியிட்டது.எனவே 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,ஒவ்வொரு தேர்விலும் முறைகேடு என்றால் தேர்வு அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையே தகர்ந்துவிட்டது. தமிழ் மண்ணில் பிறந்தது பெருமை, அதேநேரம், இதுபோன்ற நேர்மையின்மையால் வேதனை அளிக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஒரு மையத்தில் இதே முறையில் முறைகேடு என்றால், காவல்துறை தேர்விலேயும் இப்படியா?இப்படிப்பட்டவர்கள் காவல்துறை பணியில் சேர்ந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் 8,888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்தார்.மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு ,டிஜிபி ,தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் பதில் அளிக்க  உத்தரவு பிறப்பித்தார்.