#BREAKING : சாத்தான்குளம் வழக்கை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி.

சாத்தான் குளத்தில் போலீஸ் காவலில் வைத்து, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்  செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 6 மாதத்தில் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. ஆகவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளி சுந்தர், சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.