#BREAKING: இலங்கை தமிழர்களுக்கு உதவி – முதலமைச்சரின் தனி தீர்மானம் நிறைவேறியது!

பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு.

இலங்கை பொருளாதார நெருக்கடி – தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைப்பது இல்லை. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.

இலங்கை மக்களுக்கு உதவ பிரதமரிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டுபோய் நிறுத்திவிட்டது. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. எனவே, கட்சி எல்லைகளை கடந்து, கருணை உள்ளத்துடன் அனைவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து, பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இதனிடையே, இந்த தீர்மானம் மீது பேசிய ஓபிஎஸ், மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது முதலமைச்சரின் தனித்தீர்மானம் விளங்குகின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளேன் என தெரிவித்தார். இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு விண்ணைத்தொடும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கூறினார். இதன்பின் பேசிய முதல்வர்,  சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்க முன்வந்துள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்