#Breaking:இன்று இரவு நெருங்கும் புயல்;தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மைய இயக்குநர்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ‘அசானி புயல்’ வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும்,இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருவாரூர்,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும்,சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“அசானி புயல் தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், காக்கிநாடவுக்கு தென்கிழக்கே சுமார் 260 கிமீ தொலைவிலும், மசிலிபட்டினம் பகுதிக்கு தெற்கே சுமார் 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ என்ற வேகத்தில் நகர்ந்துள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.இதனால்,மீனவர்கள் இன்று மற்றும் 11,12 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி,வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.மேலும்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஐதராபாத்,மும்பை, விசாகப்பட்டினம்,ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.