ஜெர்மனியில் மாற்று திறனாளி வீராங்கனைகளை தவிக்கவிட்ட இந்தியா

புதுடில்லி: உலக பாரா நீச்சல் தொடரில், பங்கேற்க சென்ற இந்தியாவை சேர்ந்த மாற்று திறனாளி வீரர்கள் 6 பேர் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஓட்டலுக்கு திரும்ப பணமில்லாமல் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து, பின்னர் அபராதம் கட்டியுள்ளனர். வேதனை: இது தொடர்பாக நாக்பூரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை காஞ்சன மாலா பாண்டே கூறுகையில், இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் கலந்து கொள்ள ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். என்னுடன் வந்த பயிற்சியாளர் கன்வல்ஜீத் சிங்கும் திடீரென மாயமாகிவிட்டார். மீண்டும் வருவதற்கு எங்களிடம் பணம் கேட்டார். அவர் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. என்னுடன் வந்த பாதுகாலவர்கள் உதவியால் ஓட்டலுக்கு திரும்பி சென்றேன். ஒரு முறை போட்டிகள் முடிந்த பின்னர் ஓட்டலுக்கு திரும்ப பணம் இல்லை. இதனால், பெரும் அவதியடைந்த நான் வேறு வழியில்லாமல் டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் செய்தேன். இதற்கு எனக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை இவர் ஆவார். பணப்பற்றாக்குறை: இது தொடர்பாக பாராலிம்பிக் இந்திய அமைப்பு(பிசிஐ) தலைவர் குருசரன் கூறுகையில், பெர்லினில் நடக்கும் தொடருக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை இந்திய விளையாட்டு ஆணையரகம் வழங்கவில்லை. இதனால், வீரர்களுக்கு உடனடியாக பணம் வழங்கவில்லை.

பிசிஐ அமைப்பும் பணப்பற்றாக்குறையால் தவிக்கிறது. இந்த தொடருக்கு மத்திய விளையாட்டு ஆணையரகம் ரூ.33.16 லட்சம் தான் ஒதுக்கியது. ஆனால் வீரர்கள் ரூ.66.32 லட்சம் கேட்டனர். வீரர்கள் பெர்லினில் செலவு செய்த பணம், திரும்பி வழங்கப்பட்டது.

 கோரிக்கை: இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அபினவ் பிந்தரா, இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment