தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பவித்ராவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் முகநூலில் திருவான்மியூரை சேர்ந்த நிக்கில் ஜாட்டின் சர்மா (34) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் வெளியில் சென்று நெருக்கமாக செல்பி எடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிக்கிலை, பவித்ரா முகநூலில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கில் பவித்ராவுடன் தான் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவு செய்து பவித்ராவை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா சேலையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சேலையூர் போலீசார் நிக்கில் ஜாட்டின் சர்மாவை அழைத்து விசாரித்தனர். அதில், பவித்ராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக முகநூலில் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.