திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை சென்னை கொண்டு வந்த காவல்துறையினர்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என்ற செய்தி தான்.

தனிப்படை : கொள்ளையடித்து விட்டு அந்த ஏடிஎம்-ஐ  சேதப்படுத்தி விட்டு, மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளிலும் சிக்காத வண்ணம் கொள்ளையர்கள் தப்பித்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

ஹரியானா – குஜராத் : இதில் ஹரியானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். மேலும், மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இறுதியில் தொலைபேசி உரையாடல்களை கொண்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் என்பவரை விசாரணை செய்தனர்.  மேலும், குஜராத்தை சேர்ந்த 6 பேரிடமும் இந்த விசாரணை நடைபெற்றது.

ஐஜி கண்ணன் : நேற்று முன்தினம் காவல்துறை ஐஜி கண்ணன் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து, திருவண்ணாமலையை நோட்டமிட்டு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இறுதி விசாரணை : மேலும், கொள்ளையர்கள் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி செல்லும் போது, குஜராத் மாநிலத்தில் ஆறு பேரை தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்றும்,  அரியானா மாநிலத்தில் இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்களிடம் இருந்து மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் தெளிவாக கிடைத்துள்ளது. எனவும் இந்த வழக்கு முடிவடைந்து விட்டது என்றும் நேற்று முன் தினம் ஐஜி கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் கைது : இதனை அடுத்து நேற்று, காவல்துறை விசாரணை வளையத்தில் இருந்த அரியானாவை சேர்ந்த இரு நபர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு அவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஆரிப் என்ற நபர் தான் ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment