நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், பொது விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன் கருது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை துறைகள் நாளை வழக்கம்போல் இயங்கும். புயல் மாற்று கனமழை காரணமாக ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் சூறைக்காற்றுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கலில் கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதுபோன்று கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு கொண்டு இருக்கிறது தீவிரமடைந்துள்ள மிக்ஜாம் புயல்.

மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் சூழ்ந்து ஒரு தீவு போன்று மாறியுள்ளது. அதி கனமழை காரணமாக சாலைகள் முடங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.  இந்த நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்