வேளாண் மண்டலம் ! விதிகள் வரையறுக்கப்படவில்லை -தமிழக அரசு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.  பின்னர் வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் காவிரி டெல்டா மண்டல பகுதிகள் எனவும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஆகிய தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மனமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பகுடி ஆகிய தொகுதிகள் காவிரி டெல்டா மாண்டமாலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும்  காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில்,டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள் நடைபெறுகிறது.அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல்  அள்ளப்படுகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்றும்  மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.அதாவது ,பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து வழக்கினை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.