ஆப்கானிஸ்தான் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும் – பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு என பிரதமர் மோடி பேச்சு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கானின் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினர் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரதிநித்துவம் அவசியம். தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்கள் மற்றும் மரபுகளுக்கு இடையே ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தானை பயன்படுத்த கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். எஸ்சிஓவில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்