தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி.!

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமித்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இன்னும் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் கொரோனா பாதிப்பை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதாகவும், கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் அதிகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ரூ. 672 கோடியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு வழங்கி உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.