வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி-வானிலை ஆய்வு மையம்…!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 13 ஆம் தேதி அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கடந்த  15 ஆம் தேதி  ‘டவ்-தே’ புயலாக மாறியது.இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று சவுராஷ்டிராவில் கடந்த 17 ஆம் தேதி கரையை  கடந்தது.இந்த ‘டவ்-தே’ புயலானது, மகாராஷ்டிரா,கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “வடக்கு அந்தமான்,மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனைச்சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 72 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து மே 26 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.மேலும்,இந்த புயலுக்கு ‘யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனால்,மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என தேசிய பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது”,என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.