திருவாரூர் : வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி பலி!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை  காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது.

அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொடர் மழை காரணமாக நேற்று அவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மகள் மோனிஷா (9) உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு சாப்பிட்டு விட்டு மோனிஷா உறங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென சுவர் இடிந்து கீழே விழுந்ததில் மோனிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டு இருந்தார்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மோனிஷா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டின் சுவர் விழுந்ததில் ராஜசேகர் மகன் மோகன் தாஸ் (12) சிறிய காயங்களுடன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.