16 செல்வங்களை அடைய இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதும்..!

பதினாறு செல்வங்களை அடைய இந்த விஷயங்களை வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடித்தாலே போதும்.

பொதுவாக திருமணத்திற்கு சென்றால் அங்கு பெரியவர்கள் திருமண தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்ற வாசகத்தை கூறுவதை பார்த்திருப்போம். இதன் அர்த்தம் பதினாறு குழந்தைகளைப் பெற்று வாழ்வது என்பது பொருள் அல்ல. இது 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்த பதினாறு செல்வங்களை அடைவதற்கான எளிய வழிகளை தான் இந்தப் பதிவில் நாம் காணப் போகின்றோம். வாழ்க்கையில் அனைவருமே அடைய நினைப்பது வெவ்வேறான விஷயங்களாக இருந்தாலும், அவை அனைத்திலும் இந்த 16 விஷயங்கள் அடங்கி இருக்கும்.

அதனால் ஒவ்வொருவருமே இந்த பதினாறு செல்வங்களை அடைவதைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்போம். ஒருவர் இந்தப் பதினாறு செல்வங்களையும் பெற்று விட்டார்கள் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை முழுமை அடையும். அதனால் மீண்டும் உலகில் பிறவாமை என்ற வரம் கிடைக்கும். ஏனென்றால் இப்பிறவியிலேயே அவர்கள் முழுமை பெற்று விட்டார்கள் என்பதால் மறுபிறவி என்பது அவர்களுக்கு இருக்காது. ஒருவேளை அவர்களுடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த பதினாறு செல்வங்களில் ஏதேனும் ஒன்றை பெறாவிட்டாலும் மீண்டும் அவர்கள் அடுத்த பிறவியில் ஜனனம் எடுப்பார்கள். இதுதான் கர்மா என்கின்றோம்.

அதுபோல இந்தப் பதினாறு செல்வங்களையும் பெறுவதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை இப்போது காணலாம். முதலில் இந்தப் பதினாறு செல்வங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மக்கள், பொன், நெல், அறிவு, பெருமை, ஆயுள், நல்லூழ், இளமை, துணிவு, நோயின்மை, முயற்சி, பொருள். பதினாறு செல்வங்களில் ஒன்றை அடைந்தவர்கள் இன்னொன்றை அடையாமல் இருப்பார்கள். உதாரணத்திற்கு புகழ் அடைந்தவர்கள் கல்வியில் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஒரு வேளை ஆயுள் அதிகமாக இருந்தால் பெருமை கிடைக்காமல் இருக்கும்.

இது போல ஏதாவது ஒரு குறையை அடைந்திருப்பார்கள். இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைவதற்கு எளிமையான வழிகளில் ஒன்று காலையில் எழுந்த உடனேயே சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் பாதியாக குறையும் என்பது ஐதீகம். மேலும் காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் உள்ள பூஜை அறையில் 2 விளக்கு ஏற்றி வைத்து மகாலட்சுமி மற்றும் உங்களுக்கு பிடித்த தெய்வத்தை வணங்க வேண்டும். அதனுடன் பூஜையறை மிகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் இரண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து இருந்தாலும் சரி அல்லது காமாட்சி அம்மன் விளக்குடன் ஒரு சிறிய மண் அகல் விளக்கை ஏற்றி வைத்தாலும் சரி, அது மிகுந்த பலனை அளிக்கும். குறிப்பாக எவ்வளவு ஆடம்பரமான விளக்கை வைத்திருந்தாலும் சரி, மண் அகல் விளக்கிற்கு அதிகமான சக்தி உண்டு. அதனால் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பது நற்பலனை அளிக்கும்.

மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி இட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கள் அடைய வேண்டிய 16 செல்வங்களையும் அடையலாம் என்பது நியதி. முடிந்தால் மாலை நேரத்தில் ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். முக்கியமாக வயதானவர்களை மதித்து போற்றுவது அவசியமான ஒன்றாகும். இதைப்போல் நடந்தாலே நீங்கள் இந்தப் பிறவியிலேயே 16 செல்வங்களையும் பெற முடியும்.

Leave a Comment