#Breaking:போதைப் பொருள்;பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனிடம் தீவிர விசாரணை..

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.

இதனைத் தொடர்ந்து,கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன்,எம்.டி.எம்.ஏ, ஹஷிஷ், உள்ளிட்ட சில போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.உடனே,இச்சம்பத்துடன் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.பிடிபட்டவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகரின் மகன் என்று தகவல்கள் வெளியாகின.மேலும்,இந்த பார்டியில் பங்கேற்க ஒரு நபருக்கு 60 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே செய்தியாளர்களிடம் கூறுகையில்:போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.”,என்று கூறியுள்ளார்.

மேலும்,முதற்கட்டமாக அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் முடிவில் கைது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.