கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர்..!

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். 

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசின் தொகை. இந்த நிகழ்ச்சியில் கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த பரிசு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். கடந்த 10-ந் தேதி அன்று ஜெயபாலன் லாட்டரி சீட்டை அவரது ஊரிலேயே ஒரு கடையில் வாங்கியுள்ளார்.

லாட்டரியில் முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு தற்போது கமிஷன் மற்றும் வரி போக ரூ.7.39 கோடி கிடைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், துபாய் ஓட்டலில் வேலை பார்த்த வயநாட்டை சேர்ந்த செய்தலவி (48) என்பவருக்கு முதல் பரிசு விழுந்ததாக பரவிய தகவல் புரளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.