கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு..!

கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்  ஆகிய காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதன் பிறகு நடைபெறும் உடல்தகுதி தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான இந்த உடற்தகுதி தேர்வானது கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 3,794 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,045 பேர் பெண்கள், 2,748 பேர் ஆண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

இந்த பணிகள் அனைத்தும் கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேஷன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் என இந்த தேர்வை நடத்துகின்றனர். முதலில் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது, அதனை தொடர்ந்து உயரம், மார்பளவு, தொடர்ச்சியாக 7 நிமிட ஓட்டம் ஆகியவை நடத்தப்படுகிறது. பலத்த பாதுகாப்போடு உடற்தகுதி தேர்வின் முதற்கட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.