“எழுந்து நடக்கிறார் சசிகலா” – உடல்நிலையில் முன்னேற்றம்.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை!

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், அனைத்து சிகிச்சைக்கும் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சசிகலா உணவு உட்கொள்வதாகவும், அனைத்து சிகிச்சைக்கும் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.