7,382 பணியிடங்கள்…குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

இன்று முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தலைவர் அறிவிப்பு.

இன்று முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

TNPSC அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறும். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படும்.

இன்று முதல் https://www.tnpsc.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும் .மேலும், குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும்”,என்று அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்,”TNPSC தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை.முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையங்களை இனிமேல் டிஎன்பிஎஸ்சியே தேர்வு செய்யும். 2019-க்கு முன் தேர்வு மையம் விண்ணப்பத்தார்களால் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுளார்.மேலும்,இனி அனைத்து வித அரசு பணிகளுக்கும்,TNPSC தான் தேர்வை நடத்தும் என்றும் அரசாணை வெளியிடப்பட்ட பின், வேறு யாரும் பணி நியமனம் மேற்கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார்.