7.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம் ! ஆளுநர் முடிவு வரும் வரை எந்த முடிவும் வெளியிடப்படாது -தமிழக அரசு

 “7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது” என்று  உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதன் நிலை என்ன என்பது குறித்து ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .பின்பு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் அவகாசம் வேண்டும் என்றும் சட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார் .அரசுப்பள்ளியில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்த வழக்கு இது என்றும் ஒரு மாதமாக நடவடிக்கை இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இறுதியாக இன்றைக்கும்  ஆளுநர் செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது. ஆளுநருக்கு காலகெடுவோ, ஒப்புதல் அளிக்க உத்தரவோ நீதிமன்றத்தால் அளிக்க முடியாது.7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்த பதிலை அடுத்து வழக்கினை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.