ஜாவாவின் புதிய மைல்கல்.. இந்தியாவில் மட்டும் 50,000 பைக்குகள் விற்பனை!

இந்தியாவில் இதுவரை 50,000 ஜாவா பைக் விற்பனை செய்துள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா க்ளாஸிக், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகள் நிலைக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா 42, ஜாவா க்ளாஸிக், ஜாவா பெராக் என மொத்தம் 3 வகையான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த 12 மாதங்களில் வெற்றிகரமாக நாடு முழுவதும் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, டிசம்பர் இறுதிக்குள் நாடு முழுவதும் ஜாவா டீலர்களின் எண்ணிக்கையை 205 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. ஜாவா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா நேபாள நாடுகளுக்கும் தனது பைக்குகளை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதாக ஜாவா நிறுவனம் கூறியுள்ளது.