மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரரின் மந்த்ராலயத்தில் 424 வது ஜெயந்தி விழா !!!!!

ஸ்ரீ ராகவேந்திர மகான் பல்வேறு அற்புதங்களை புரிந்தவர். ஜீவனுடன் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரர் மத்வாச்சார்யாரின் கொள்கையான – துவைத தத்துவத்தைப் பின்பற்றி அதை நிலை நாட்டி , பின் 1671-ல் ஆந்திர மாநிலத்தில் மந்திராலயம் எனும் இடத்தில் அவர் தமது பிருந்தாவனத்தை அமைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில் , பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா என்னும் பெற்றோருக்கு “வெங்கண்ண பட்டர்” என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார்.திருப்பதி வெங்கடேச்வரர் அருளால் பிறந்ததன் நினைவாக வேங்கடநாதர் எனவும், வேங்கடாசார்யா எனவும் அழைக்கப்பட்டார்.

1671-ம் வருஷம், சிரவண ஆண்டு கிருஸன பட்சம் துவிதியை திதியன்று, ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி எய்தினார். மந்திராலயத்தில் தமது ஜீவ ஸமாதியைக் காணக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே ஸ்வாமிகள் அருளுரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த இடம் பிருந்தாவனம் என அழைக்கப் படுகிறது.

ஆண்டுதோறும் இந்த நன்னாளில் பிருந்தாவனத்திலும், உல‌கெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் பிற பிருந்தாவனங்களிலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.

காலை எட்டு மணிக்கு மேல் பாலாபிஷேகம் நடைபெறுகிறது . அனைவர்க்கும் பாயாசம் பிரசாதமாக தரப்படுகிறது.வியாழக்கிழமை தரிசனம் மிகவும் விஷேசமானதாகும் .ஸ்ரீ ராகவேந்திரருக்கு அடுத்தடுத்து வந்த குருமார்களின் சமாதி இங்கு அமைக்கப்பட்டு உள்ளது .

ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் அவர் பிறந்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.சுவாமிகள் அவதரித்த வீட்டை 1989 – ல் முறைப்படி கோயிலாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இன்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது .

ஸ்ரீ ராகவேந்திர மகான் அருளிய முக்கியச் செய்திகள் :

 

 

1. நேர்மையான முறையில் வாழாது, நேரிய சிந்தனை வர இயலாது.

2. நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.

3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.

4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.

5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.

 

ஜெயந்தி விழா:

 

ராகவேந்திர சுவாமிகளின் 424-வது ஜயந்தி விழாவான இன்று உலகம் முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.

மந்திராலயம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஆராதனைகளும்  நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 8.3.19 அன்று, பாதுகா பட்டாபிஷேகத்தோடு குரு வைப உற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு ஆராதனைகள், நடனம், யட்ச கானம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இன்றுடன் குரு வைப உற்சவம்  நிறைவுபெறுகிறது.

Leave a Comment