அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயம்..அமலாக்கத்துறை தீவிரம்!

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமானது அடுத்து அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமாகியுள்ளதாக அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெர்சிடிஸ், ஆடி மற்றும் இரண்டு ஹோண்டா சிட்டி ஆகிய கார்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்ற வாகனங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கடந்த 23ம் தேதி கைது செய்திருந்தது.

இந்த ஊழல் நடந்தபோது மாநில கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, சுமார் 26 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஊழல் தொடர்பான சோதனையின்போது அர்பிதா முகர்ஜி வீட்டில் சுமார் ரூ.21 கோடி ரொக்கம், 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் அர்பிதா முகர்ஜிக்கு தொடர்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று மேலும், ரூ.27.9 கோடி ரொக்கம் மற்றும் சுமார் 6 கிலோ தங்கத்தை அமலாக்க இயக்குனரகம் (ED) கைப்பற்றியது. அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்றும் மேலும் ரூ.27.9 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத்தின் அளவு, 50 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 4 கார்கள் மாயமானது அடுத்து அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது.

மேலும், ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கிய மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment