சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

  • பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார்.

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஜூன்ஹிப்போட்டோ மாவட்டத்தை சேர்ந்தவர் 3 வயது லிபாவி என்ற சிறுமி. இவருக்கு ஜூன் 2ஆம் தேதி இரவிலிருந்து சளித்தொல்லை இருந்து வருகிறது. இவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, சுய விழிப்புணர்வோடு யோசித்த அச்சிறுமி லிபாவி அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார். மாஸ்க் போட்டுகொண்டு வந்த அந்த சிறுமி லிபாவியிடம் மருத்துவர் என்ன செய்கிறது என்று விசாரித்துள்ளார். அதற்கு தனக்கு சளி பிடித்திருப்பதாக லிபாவி தெரிவித்துள்ளார்.

மேலும் இதை நாகாலாந்து பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் எப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பெரியவர்களே  மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போடவும் பயந்து வரும் இக்காலத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொண்ட இச்சிறுமி பலருக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைக்கு விரைவில் குணமாக வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்தினால் இக்குழந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.