உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு…!

நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கொண்ட இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது காலை 8.45 மணிக்கு மோதியது. இந்த விமானம் முதலில் வடக்கு கோபுரத்தைத் தாக்கி உள்ளது. இதனால் ஏற்பட்ட தீயில் 102 நிமிடங்கள் வரை அந்த கோபுரம் எரிந்துள்ளது. அதன் பின்பு 18 நிமிடங்கள் கழித்து 9.03 மணிக்கு மற்றொரு விமானம் அடுத்த கோபுரத்தின் மீது மோதி தாக்கியுள்ளது. இந்த கோபுரம் 56 நிமிடங்களாக பற்றி எரிந்துள்ளது.

இந்த விமானத் தாக்குதலில் இரண்டு கட்டிடங்களும் தீப்பற்றி எரிந்ததில், கட்டிடத்திற்குள் இருந்த பலர் சிக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 2,606 பேர்  உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் மேற்குப்பகுதியில் மூன்றாவது விமானத் தாக்குதலும் தீவிரவாத கும்பலால் அரங்கேற்றப்பட்டது. மேலும் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்துள்ளது.

இது நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இது கீழே விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நான்கு விமான தாக்குதலில் 2,977 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பு தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் அல்கொய்தாவை அழிக்கவும், ஒசாமா பின்லேடனை பிடிக்கவும் போர் தொடுத்தார். இதற்காக சர்வதேச அளவில் அவர் கூட்டணியை உருவாக்கி 11 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை கொன்றது. சம்பவம் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும், தற்பொழுதும் அமெரிக்க வரலாற்றில் இந்த நாள் ஒரு கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal