பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த 2 பேராசிரியர்கள்.! சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து.!

தமிழ்நாடு அரசு பரிந்துரையின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான தீர்மானம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்தார். இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு தனது கைகளால் பட்டமளித்தார். இதில் 700க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டமளித்தார். ஆனால், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் கையால் பட்டத்தை வாங்க மறுத்து விழாவைப் புறக்கணித்த பேராசிரியர்களுக்கு, உறுப்பினர்களுக்கும் சு.வெங்கடேசன் எம்.பி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில். “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில்முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா.சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.