கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 14 வயது சிறுவன் .!

  • கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • நேற்று புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார்.

செங்கல்பட்டு அடுத்து உள்ள வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா இவர்களுக்கு புருஷோத்தமன் என்ற 14 வயது மகன் உள்ளர்.இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல்துறை, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் கிணற்றில் மிதந்த உடல் காணாமல் போன புருஷோத்தமன் என கண்டுபிடிக்கப்பட்டது.

புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புருஷோத்தமன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

author avatar
murugan