ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி அமுதா
இத்தம்பதியினர், பட்டாபிராம், வ.உ.சி. நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக நேற்று முன் தினம் மாலை, அமுதா பட்டாபிராம் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் கிளையில் ரூ.8 ஆயிரம் எடுத்துக் கொண்டு, கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம இளைஞர் ஒருவர் அமுதாவை வழிமறித்து, அவர் கையில் இருந்த பணப் பையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். இதையடுத்து, அமுதா போட்ட சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், தப்பியோடிய வழிப்பறி இளைஞனை துரத்திப் பிடித்து, ’தர்ம அடி’ கொடுத்து, பணப் பையை கைப்பற்றி அமுதாவிடம் அளித்தனர். பிறகு, அந்த இளைஞரை பட்டாபிராம் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர் . பிடிபட்ட இளைஞர் பட்டாபிராம் அருகே உள்ள அணைக்கட்டுசேரியைச் சேர்ந்த அறிவழகன்(23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அறிவழகனை கைது செய்தனர்