கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மிக்சி, குக்கர் பொருட்களுடன் சென்ற லாரியை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இருந்து சென்னை வந்த அந்த லாரி, கிருஷ்ணகிரி அருகே சிறிய விபத்தை சந்தித்தது. லாரியில் மோதிய இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஓட்டுனர் சிவக்குமாரிடம் சண்டையிட்டு லாரியை காவல் நிலையம் கொண்டு செல்ல வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஓட்டுனரை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து, மற்றொரு இளைஞர் லாரியை ஓட்டிச் சென்றார்.
வழியில், ஓட்டுனர் சிவக்குமாரை இரு சக்கர வாகனத்தில் இருந்த கீழே தள்ளிவிட்ட அவர்கள் லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பர்கூர் போலீசார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே லாரியை மீட்டனர். லாரியை கடத்தியது திருப்பத்தூரை சேர்ந்த கொடியரசன், டில்லிகுமார் என்பது தெரியவந்தது.