கோவையில் குட்கா தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை..!

கோவை அருகே, சூலூர் கண்ணம்பாளையத்தில் செயல்பட்ட குட்கா தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்தி, ஆலை மேலாளரான ரகுராம் மற்றும் வடமாநில ஊழியர்கள் 3 பேரை கைது செய் தனர். ஆலை உரிமையாளரான அமித்ஜெயினை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

இதற்கிடையே ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் மற்றும் பாப்பம்பட்டி பரமசிவம், ராவத்தூர் செல்வராஜ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர்.

இந்த வழக்கில் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட மேலும் 3 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக்கோரி முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, தி.மு.க.வினர் மீது போலீசார் பொய் வழக்கு போட வேண்டாம் என்று கோஷமிட்டனர்.

தி.மு.க. முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தி.மு.க.வினர் 30 நிமிடத்துக்கும் மேல் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட 200 பேரை கைது செய்தனர்.

இதேபோல், முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அணி, அணியாக ஊர்வலமாக திரண்டு வந்தனர். அவர்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கைதாகி விடுவிக்கப்பட்ட பொங்கலூர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசார் விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, குட்கா தொழிற்சாலை விவகாரத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவரும் உடந்தையாக இருந்ததாக போலீஸ் அதிகாரி கூறியிருப்பது சரியல்ல. ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீஸ் அதிகாரி அவ்வாறு கூறியிருக்கிறார்.

தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும், அவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் போராட்டம் நடைபெறும்.

கோவை குட்கா தொழிற்சாலை வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இங்குள்ள போலீஸ் அதிகாரி மாதம், மாதம் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் என்று நாங்கள் கூறினால் எப்படி இருக்குமோ, அதேபோலத்தான் போலீஸ் சூப்பிரண்டும், தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் மீது குற்றம்சாட்டியுள்ளார். எந்த முன் யோசனையும் இல்லாமல் உயர் போலீஸ் அதிகாரியே இந்த வழக்கில் தி.மு.க. மீது பழிபோடுவது சரியல்ல. எனவே போலீசார் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment