கண்தானம் சிறந்த தானம்..!

உடல் தானம், உடல் உறுப்புகள் தானம், ரத்த தானம் போன்ற விழிப்புணர்வு சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்படுத்தி வரும் விழிப் புணர்வு வாயிலாக கண்தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம் மூலம் ஏராளமானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 39 வயதாகும் கோபிநாத், வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். தனது சேவை பற்றி அவர் சொல்கிறார்:

‘‘கண் பார்வையில்லாமல் ஏராளமானவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கண்பார்வை கொண்ட ஒருவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது கண்களை தானமாக பெற்றுவிட்டால், அந்த ஜோடி கண்கள் மூலம் 2 முதல் 8 பேர் வரை பார்வை பெற்றுவிடலாம். ஆனால் குறித்த நேரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து கண்கள் எடுக்கப்பெறாவிட்டால் அவை பயனின்றி போய்விடும். மண்ணோடு மக்கும், நெருப்பில் எரிந்து போகும் கண் கள் பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கின்றன. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த பின்பு, சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

பார்வையற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்ததால், கண் தானம் பெறும் பணியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினேன். 24 மணி நேரமும் எனது செல்போனை ‘ஆன்’ செய்து வைத் திருப்பேன். நள்ளிரவு வேளையிலும், அதிகாலையிலும் அழைப்புகள் வரும். இறப்பு செய்தியை கேள்விப்பட்டவுடன் உடனே அங்கு சென்று துக்கத்துடன் இருக்கும் உறவினர்களிடம் பேசி கண் தானம் குறித்து விளக்குவேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தவுடன் கண் மருத்துவமனைக்கு பேசி மருத்துவர்களை வரவழைப்பேன். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் பணி நிமித்தமாக சில முறை சென்றுள்ளேன். அப்போதும் நண்பர்கள், பொதுமக்கள் செல்போனில் தகவல் தெரிவிப்பார்கள். அங்கிருந்தபடியே கண் மருத்துவமனைகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி கண்களை தானம் பெற்றுள்ளேன்.

இறந்தவர்களின் கண்களை தானம் அளித்தவுடன் அவர் களது உறவினர்கள் துக்கத்திலும் மன நிறைவோடு நன்றி சொல்லும் காட்சியை காணும்போது நெஞ்சம் கனக்கும். கண் மற்றும் உடல்தானங்களுக்கு வயது வரம்பு கிடையாது. 15 வயது முதல் 98 வயது வரையிலான இறந்தவர்களின் கண்களை தானமாக பெற்றுள்ளேன். கண்தானம் அளித்தவர்களின் படங்களை பேனர் செய்து அவரது இருப்பிடம் அருகே வைக்கிறோம். இதன்மூலமும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதை பார்ப்பவர்கள் தங்களின் குடும்பத்தினர் யாராவது இறந்தால் கண்தானம் செய்ய தொடர்பு கொண்டுள்ளனர். கண் மற்றும் உடல்தானம் பெற்றது குறித்து அவர்களின் விவரங்கள் பத்திரிகைகளில் வருவதால் அதனைக்கண்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து அதனால் பலரும் தானம் அளிக்க முன்வருகின்றனர். உலக அளவில் இலங்கையில்தான் அதிக அளவு பொதுமக்கள் கண்தானம் செய்து வருகின்றனர். அங்குள்ள கண் வங்கிகளில் கண்கள் எப்போதும் தயாராக இருக்கும். அதுபோன்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும்’’ என்கிறார்.

இறந்தவர்களின் கண்கள், உடல்களை தானமாக பெற செல்லும்போது மனதை கலங்க வைத்த சம்பவங்களை கோபிநாத் நினைவு கூர்கிறார்:

‘‘ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு, தனது தாயார் இறக்கும் நிலையில் உள்ளார். அவரது கண் மற்றும் உடலை தானம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு தனது தாயார் இறந்து விட்டதாகவும், அவரது இறப்பு குறித்து உறவினர்களுக்குகூட தகவல் தெரிவிக்கவில்லை. உங்களுக்குத்தான் முதலில் தெரிவிக்கிறேன் எனவும் கூறினார். அதைகேட்டு நான் கண்கலங்கி விட்டேன். அவரது உடலை தானமாக பெற்று, முறைப்படி மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினோம்.

65 வயதான பெண்மணி ஒருவர் உயிரோடு நல்ல நிலையில் இருந்தபோது உடலை தானம் செய்வதாக கூறி இருந்தார். பின்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த பாதிப்போடு இறந்ததால் அவரது உடலை பெற ஒரு மருத்துவக் கல்லூரி மறுத்துவிட்டது. அந்த பெண்ணின் ஆசைப்படி அவரது உடலை தானம் செய்ய பல மருத்துவ கல்லூரிகளை தொடர்பு கொண்டோம். இறுதியில் ஒரு மருத்துவமனை சம்மதித்தது. எங்களுடைய முயற்சியை பார்த்து அந்த பெண்ணின் இறுதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரது உறவினர்கள் நெகிழ்ந்தனர். அவர்களும் விழிப்புணர்வுகொண்டு உடல்தானம் செய்ய முன்வந்தனர். அதேபோல் 20 வயது மதிக்கத்தக்க ஸ்ரீபன் என்ற வாலிபர் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவர்களது குடும்பத்தினர் அவரது உடல்உறுப்புகளை தானம் செய்ய என்னை தொடர்பு கொண்டனர். மகனின் இந்த துயரமான நிலையிலும் என்னை அவர்கள் தொடர்பு கொண்டு உடல்உறுப்பு தானம் குறித்து என்னிடம் பேசியது எனது மனதில் இன்னும் நீங்காத நினைவாக உள்ளது’’ என்று மனம் நெகிழ்கிறார்.

உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு மட்டுமின்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது கோபிநாத்தின் கருத்தாக இருக்கிறது.

“கண் மற்றும் உடல்தானம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கண் தானம் பெற 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். ஒரே நாளில் பல இடங்களில் கண்தானம் அளித்தாலும் அவற்றை பெற மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். தகவல் தெரிவித்தால் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகின்றனர். 30 நிமிடங்களுக்குள் கண்களை தானமாக பெற்று செல்கின்றனர். இதேபோல் அரசு மருத்துவமனைகளில் கண் மற்றும் உடல் தானங்களை பெற தனியாக மருத்துவ குழுக்களை அமைக்க அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

என்னிடம் உடல் மற்றும் கண்தானம் அளிக்க 500 பேருக்கும் மேல் பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ரோட்டரி சங்கத்தின் கண் மற்றும் உடல்தான தலைவராக செயல்பட்டு வருகிறேன். பொதுமக்களிடம் கண் மற்றும் உடல்தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரம் காட்டியதன் பலனாக தற்போது வரை 108 ஜோடி கண்களை தானமாக பெற்றுள்ளேன். 30 நபர்களின் உடல்களையும், மூளைச்சாவு அடைந்த 3 நபர்களின் உடல் உறுப்புகளையும் தானமாக பெற்றுள்ளேன். நோயாளிகளுக்கு 200 யூனிட்டுக்கும் அதிகமாக ரத்தம் கிடைக்கவும் உதவியிருக்கிறேன்.

எந்நேரமானாலும் கண்கள் மற்றும் உடல்தானம் பெற செல்வதால் பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆயிரம் ஜோடி கண்களும், நூறு உடல்தானமும் பெற்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு புதுவாழ்வை அளிக்க வேண்டும் என்பதே என் லட்சியமாகும். இந்த கண் மற்றும் உடல்தான விழிப்புணர்வு குடியாத்தம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தற்போது ரோட்டரி உறுப்பினர்களுக் கிடையே ஏற்பட்டு அதற்கான பணிகளில் அவர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்’’ என்கிறார்.

எம்.கோபிநாத் பி.காம் படித்துள்ளார். இவருடைய மனைவி அருணா. இந்த தம்பதிக்கு சுதர்சன் என்ற மகனும், ஸ்ரீதிவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர் ஏராளமான விருதுகளும் பெற்றுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment