இராமநாதபுரத்தில்  நூதன முறையில் இரு கடைகளில் கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளை!

2 கடைகளில் நூதன முறையில் ராமநாதபுரத்தில்  உரிமையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வியானன்று சக்கரைக்கோட்டையில் உள்ள மரியா கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர். உரிமையாளர் சுந்தரவேலிடம், பெட்ரோல் பங்க்கின் அருகே ஒரு பெண் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறியுள்ளனர். சுந்தரவேலிடம் சொல்லச் சொன்னதாகவும் அவர்கள் பதற்றத்துடன் கூறியுள்ளனர். அதிர்ந்து போன சுந்தரவேல், கடையை அப்படியே போட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா பெட்ரோல் பங்க்கிலும் தேடித்தேடி ஏமாந்துள்ளார். கடைக்கு திரும்பியபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு, 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இதேபோல, பட்டினம்காத்தான் பகுதியில் கே.டி. (( K T )) சிமெண்ட் கடையில் காசாளர் ரவியை சந்தித்த 2 பேர், உரிமையாளர் கார்மேகம் விபத்துக்குள்ளானதாக கூறி 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தனர். 2 பேர் கல்லாப்பெட்டியை உடைத்துக் கொள்ளையடிக்க, மேலும் இருவர் வாடிக்கையாளர்கள் யாரும் கடைக்கு செல்லாதவகையில் சாமர்த்தியமாக பேசி திருப்பி அனுப்பியது பின்னர் தெரியவந்துள்ளது.

2 கொள்ளை சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கேணிக்கரை போலீசார், 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் கடைகளை நோட்டமிட்டதை கண்டுபிடித்தனர். அவர்கள் வேறு வழிப்பறிகளிலும் ஈடுபட்டதை உறுதிசெய்த போலீசார், கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment