பிரபல ரவுடிக்கு அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி பாஸ்! காவல்துறையிடம் தீவிர விசாரணை!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி தரிசனம் வழங்கியது யார் என்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் தோன்றுகிறார். இந்த ஆண்டு கடந்த 4 ம் தேதி  தோன்றிய அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் சாதாரணமாக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலையில் உயர் அதிகாரிகள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலருக்கு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வி.வி.ஐ.பி தரிசனம் பாஸ் வழங்கியுள்ளது கோவில் நிர்வாகம்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி  வரிச்சூர் செல்வம் அந்த பாஸ் பயன்படுத்தி தரிசனம் செய்துள்ளார். சுவாமி அருகில் உட்கார்ந்து தரிசனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ள ரவுடி சிறப்பு தரிசனம் செய்து இருப்பது பற்றி பலர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அந்த நேரம் பணியில் இருந்த காவலர்களை விசாரித்து வருகின்றனர்.